Sunday 8 November 2009

சாசனம்

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி என மிகச்சிறந்த படங்களைத் தந்த மகேந்திரன் நீண்ட ஓய்வுக்குப் பிறகு எழுதி இயக்கிய திரைப்படம் சாசனம்! கதை அம்சம் தொடங்கி உருவாக்கம் வரை எல்லா வகையிலும் இன்றைய தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபடும் படமாக சாசனத்தை தந்திருந்தார் மகேந்திரன்.

நம் நாட்டில் எழுதப்பட்ட எத்தனையோ சாசனங் கள் இருக்கின்றன. சட்டங்கள் என்கிற அந்த சாசனங் களை மீறாமல் கடைபிடிக்கிறோம். சாசனம் படத்தில் சொல்லப்பட்டிருப்பதோ, நன்றி மறக்காதிருத்தல், பிறரிடம் அன்பு காட்டுதல், மதித்தல் போன்ற எழுதப் படாத சாசனங்கள் பற்றி. இவற்றை பின்பற்றி வாழும் போதுதான் வாழ்க்கை அர்த்தபூர்வமாகிறது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் கதைதான் சாசனம் படம்!

காரைக்குடியை உள்ளடக்கிய செட்டிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறுவது இன்றைய தமிழ்ப்படங் களில் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. ஆனால் சாசனம் படத்தின் படப்பிடிப்பு செட்டி நாட்டில் நடத்தப்பட்டதில் அர்த்தபூர்வமான விஷயம் அடங்கியிருக்கிறது. அதன் கதைக்களமே செட்டிநாடு தான். படப்பிடிப்பு நடத்தப்பட்ட கண்டணூர் கிராமத்தில்தான் சாசனம் படத்தின் கதையும் நிகழ்கிறது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை. கதைக்களத்திலேயே, நிஜமான மனிதர்களின் மத்தியில் படப்பிடிப்பு நடத்தியது சாசனம் படத்தின் கதைக்கு கூடுதல் வலிமையை சேர்த்திருப்பது மட்டுமல்ல, நகரத்தார்களின் வாழ்க்கைப் பதிவாகவும் சாசனம் படம் புதுப்பரிணாமம் பெற்றிருக்கிறது.

செட்டிநாட்டுக் கலாச்சாரத்தின் இன்றைய யதார்த்த நிலையை அசலாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதனாலேயே சாசனம் - நகரத்தார்களின் வாழ்க்கை சரிதமாகி இருக்கிறது. செட்டிநாட்டுக் கலாச்சாரப் பெருமைகளைக் நகரத்தார் கட்டிக்காக்கும் விதம், வாழ்க்கையின் துயரச்சூழலில் சில நேரங்களில் தன் கலாச்சாரத்தை இழக்க நேரும் நிர்ப்பந்தம் அவர்களை ஆட்கொள்ளும்போது அடையும் துயரம் என அவர்களின் உணர்வுகள் படம் முழுக்க வியாபித்து நிற்கின்றன.

கதை நிகழும் பகுதியிலேயே சாசனம் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும் கலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருதுவின் பணியும் அலாதியானது. பின்புலத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நுணுக்கமாகக் கிரகித்து தன் பங்களிப்பை அளித்திருக்கிறார் மருது.இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் அரவிந்த்ஸாமி! சுவீகாரம் கொடுக்கப்பட்ட ஒருவனின் மனத்துயரத்தை இத்தனை அழகாய் எவரால் வெளிப்படுத்த முடியும்? அவரது மனைவியாக கௌதமி! நமக்கும் இப்படி ஒரு மனைவி வாய்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம். அவருக்குக் கொடுக்கப்பட்ட பின்னணிக் குரல்தான் ஆண்தனமாக பயமுறுத்தியது.சரபோஜி மன்னரின் வம்சத்தில் வந்த சரோஜி எனும் ஏழைப்பெண்ணாக ரஞ்சிதா! இவரது திரைவாழ்க்கையிலும் பேர் சொல்லும் பாத்திரம்.மகேந்திரனின் படங்களில் இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும் பலமாக இருக்கும். சாசனம் படத்திற்கோ இசை பாலபாரதி! மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது துரதிஷ்டம்.உலகத்தரம் என்பது நவீன சாதனங்களைக் கொண்டு படம் எடுப்பதல்ல, அந்தப்படம் உருவாகும் சமூக அமைப்பின் கலாச்சாரத்தை, யதார்த்தத்தை நசுக்காமல் உள்ளது உள்ளபடி எடுப்பதுதான்! அந்த அடிப்படையில் சாசனம் உலகத்தரத்துடன் எடுக்கப்பட்ட படம்.மகேந்திரனின் முந்தையப்படைங்களைப் போலவே சாசனம் படமும் ஆரோக்கியமான சினிமாவை விரும்புகிறவர்களின் மத்தியில் நல்ல ரசனையை வளர்க்கும். திரைப்படம் என்பதால் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

கதை அல்ல, திரைக்கதை!

சிறுகதை, நாவல் போன்ற எழுத்திலக்கியத்தை வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் தருவது நடை என்று சொல்லப்படும் கதை சொல்லும் உத்தி. அது போலவே, திரைப்படத்தை சுவாரஸ்யப்படுத்துவது திரைக்கதை என்கிற சினிமா மொழி. ராம் படத்தின் மூலம் மிகச் சிறந்த திரைக்கதை நிபுணராகவே வெளிப்பட்டிருக் கிறார் இயக்குநர் அமீர்.


ஒரு திரைப்படப் பத்திரிகையாளனாய் திரைத்துறை யில் தொடர்புக் கொண்டிருக்கும் என் அனுபவத்தில், திரைக்கதையின் அர்த்தத்தையும், வலிமையையும் மிகச்சரியாய் புரிந்து கொண்ட இயக்குநராக நான் உணர்ந்தவர்களில் ஒருவராக இருக்கிறார் அமீர்.


திரைப்படத்தயாரிப்பில் தவிர்க்க முடியாத சம்பிர தாயமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று. பத்திரிகை யாளர் சந்திப்பு. பிரஸ்மீட் என்று சொல்லப்படும் இந்தச் சந்திப்பில், படம் எடுப்பவர்கள் தங்கள் படத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். பெரும்பாலும் பொய்யாய், மிகையாய்.


அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர் களிடமிருந்து தவறாமல் எழுப்பப்படும் கேள்வி: ‘Ôபடத்தோட கதை என்னங்க?’’ அப்போது கெட்ட வார்த்தையைக் கேட்டது போல் துள்ளிக் குதிப்பார்கள், துடித்துப் போவார்கள் சினிமாக்காரர்கள். இதற்கு கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களும் கூட விதிவிலக்கில்லை.


‘கதையைச் சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும் ஸார். அதை மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்!’’ என்று கதை ரகசியத்தைக் கட்டிக்காப் பார்கள். எனக்கு அவர்களைப் பார்க்கும்போது கோபத்தை விட, அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பு வருவதை தவிர்க்க முடிந்ததில்லை.


சினிமாவின் வெற்றிக்குக் காரணமே கதைதான் என்று நினைக்கும் இந்த பத்தாம்பசலிகளுக்கு, திரைப்படத்தில் திரைக்கதையின் பங்கு என்னவென்பதே புரியவில்லையே என்று வருத்தப்பட்ட நாட்களும் உண்டு.


சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லியாக வேண்டும். சினிமாக்கார்கள் கட்டிக் காக்கும் கதை ரகசியத்தை உடைத்த பாவத்தை செய்ததால் நான் சந்தித்த அனுபவம் இது.


வித்தியாசமான இயக்குநராக தன்னை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் சேரன் பாரசீக ரோஜா என்ற பெயரில் புதிய படம் தொடங்கும் முயற்சியில் இருந்தார் அப்போது. அப்படம் தொடங்கப்படுவதற்கு முன்பு, அவரது படத்தின் கதையைப்பற்றி, இதுதான் கதை என்று ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டேன். அந்தச் செய்தி வெளியான அன்று கோபத்தின் உச்சிக்கேப் போய்விட்டார் சேரன்.


நான் எழுதிய செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு, சில பல சண்டியர்களை திரட்டிக் கொண்டு சென்ற இயக்குநர் சேரன் அங்கே மிகப்பெரிய கலாட்டாவே செய்தார். அதோடு அடங்கவில்லை அவரது ஆத்திரம். நான் தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகை அலுவலகங்களை எல்லாம் தொடர்பு கொண்டு,


‘பிஸ்மிக்கு உங்கள் பத்திரிகையில் எழுத வாய்ப்புக் கொடுக்கக் கூடாது’’
என்று கேட்டுக் கொண்டதன் மூலம் என் பத்திரிகை வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

அதற்கு சில பத்திரிகையாளர்களும் உதவி செய்தார். ஆனாலும், அது அத்தனை சுலபமல்ல என்று உடனடியாகவே சேரனுக்குத் தெரிய வந்தது. அடுத்தக் கட்டமாக, அவரது உதவியாளர் மூலம் என் வீட்டுக்கு தினமும் மலர்க்கொத்து அனுப்பி பின்குறிப்பாய் நன்றி என்று வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.

இந்த சம்பவத்துக்குப் பின் எனக்கும் அவருக்குமான நட்பு விரிசல் அடைந்ததும், சில வருடங்கள் இருவரும் பகையாளியாய் இருந்து, பின்னர் கைக்குலுக்கிக் கொண்டதெல்லாம் தனிக்கதை.


இதை இங்கே நினைவுகூரக்காரணம் திரைப்படத்தின் வெற்றிக்கு கதை கதை மட்டுமே காரணம் என்று சினிமாக்காரர்கள் எவ்வளவு அழுத்தமாக, அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டவே!


சரி.. திரைப்படத்தின் வெற்றிக்குக் கதை மட்டும்தான் காரணமா? ஆம் என்றால், எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன. பட வெளியீட்டுக்கு முன் என்னதான் பொத்திப் பொத்தி வைத்தாலும், படம் வெளியான முதல் நாளில், முதல் காட்சியிலேயே படத்தின் கதை இதுதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. போதாக்குறைக்கு தினப்பத்திரிகைகள் விமர்சனம் என்ற பெயரில், இடைவேளை, வணக்கம் டைட்டில் கார்ட் தவிர படத்தின் மொத்தக் கதையையும் பத்திப்பத்தியாய் எழுதித் தள்ளிவிடுகின்றன.


தனியார் டி.வி. சேனல்களின் திரைவிமர்சனங்களிலும், கவுண்ட வுன் நிகழ்ச்சிகளிலும் கூட படக்கதையை பகிரங்கப்படுத்திவிடு கிறார்கள். அதற்கு மேல், க்ளிப்பிங்ஸ் என்ற துண்டுக்காட்சிகள் மூலம் படத்தின் முக்கால்வாசி, மற்றும் முக்கியமானக் காட்சிகள், வெவ்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை சென்ற டைந்துவிடுகின்றன.


இத்தனைக்குப் பிறகும் படங்கள் வெற்றியடைகின்றனவே எப்படி? ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் கதைதான் என்றால், அந்தக்கதை வெளியே தெரிந்ததும், படத்தின் வெற்றி பாதிக்கப்பட வேண்டுமே? ஏன் அப்படி நடப்பதில்லை?


எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படத்தை மறந்திருக்க மாட்டோம். படத்தின் முதல் காட்சியிலேயே, கதாநாயகன் கதாநாயகி இருவரும் கடைசியில் சேரப்போகிறார் என்ற விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் கதையே தொடங்கும். அந்தப்படம் அடைந்த வெற்றியை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அ ஆ படத்திலும் இதே உத்தியில்தான் கதை சொன்னார் எஸ்.ஜே.சூர்யா! என்ன குடிமுழுகிவிட்டது?


இன்னொரு விஷயம்! காதல்கதை அம்சம் கொண்ட படம் என்று வைத்துக் கொள்வோம். என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் கடைசியில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்பது ரசிகர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்த விஷயம்தான். அடிதடிப்படம் என்றால் கடைசியில் ஹீரோ வில்லனை ஜெயித்துவிடுவான் என்பதும்..அப்புறமும் எப்படி இந்தப்படங்கள் வெற்றியடைகின்றன?


திரைப்பட விளம்பரங்களின் மூலமும், அது காதல்ப்படமா? அடிதடிப்படமா, குடும்பப்படமா என்பதை, அதாவது படத்தின் கதையை ஓரளவு எளிதில் விளங்கிக் கொண்டுவிட முடியும். அதைப்பார்க்கும் பார்வையாளன், இது இன்ன மாதிரியான படம் என்ற முன் தீர்மானத்தோடுதான் திரையரங்குக்கு வருகிறான். அதற்கு மாறாய் படம் இருக்கும் போதுதான் ஏமாற்றமடைகிறான்.
ஆக, திரைப்படங்களின் வெற்றிக்குக் கதை முக்கியம்தான். ஆனால், கதை மட்டுமே முக்கியமில்லை. எனில் எது முக்கியம்? சந்தேகமில்லாமல் திரைக்கதைதான். கதையைச் சொல்லும் உத்தியிலேயே எந்தவொரு படமும் போற்றப்படுகிறது, அல்லது தூற்றப்படுகிறது.


ராம் படத்தின் கதையைப் பார்ப்போம். அம்மாவைக் கொலை செய்தவனை மகன் பழி வாங்குகிறான் என்பதே ராம் படத்தின் ஒரு வரிக்கதை. இந்த ஸ்டோரி லைனைக் கேட்கும்போது ராம் படத்தின் மீது என்ன நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும்? வழக்கமான பழிவாங்கும் கதைதானே என்ற அலட்சியமான எண்ணமே ஏற்படும். காரணம்.. அம்மாவைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட எத்தனையோ திரைப்படங்களைத் திகட்டத் திகட்டப் பார்த்திருக்கிறோம்.


அப்படி ஒரு கதை அம்சத்தைக் கொண்ட ராம் படம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதோடு, இந்தியன் பனோரமா விழாவில் திரையிட தேர்வு பெற்றது என்றால்..காரணம் என்ன? புதுசாக சொல்லப்பட்டவிதம்தான்! அதாவது அமீர் கதையைச் சொன்ன உத்தியே ராம் படத்துக்கு புதிய நிறத்தைக் கொடுத்தது.


சுருக்கமாகச் சொன்னால் திரைக்கதையின் வலிமையையும் வல்லமையையும் புரிய வைக்கு படமாக ராம் இருந்தது

ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு சமகாலப்படங்களில் மிகச்சிறந்த உதாரணம் ராம் படமே!