Sunday 8 November 2009

சாசனம்

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி என மிகச்சிறந்த படங்களைத் தந்த மகேந்திரன் நீண்ட ஓய்வுக்குப் பிறகு எழுதி இயக்கிய திரைப்படம் சாசனம்! கதை அம்சம் தொடங்கி உருவாக்கம் வரை எல்லா வகையிலும் இன்றைய தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபடும் படமாக சாசனத்தை தந்திருந்தார் மகேந்திரன்.

நம் நாட்டில் எழுதப்பட்ட எத்தனையோ சாசனங் கள் இருக்கின்றன. சட்டங்கள் என்கிற அந்த சாசனங் களை மீறாமல் கடைபிடிக்கிறோம். சாசனம் படத்தில் சொல்லப்பட்டிருப்பதோ, நன்றி மறக்காதிருத்தல், பிறரிடம் அன்பு காட்டுதல், மதித்தல் போன்ற எழுதப் படாத சாசனங்கள் பற்றி. இவற்றை பின்பற்றி வாழும் போதுதான் வாழ்க்கை அர்த்தபூர்வமாகிறது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் கதைதான் சாசனம் படம்!

காரைக்குடியை உள்ளடக்கிய செட்டிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறுவது இன்றைய தமிழ்ப்படங் களில் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. ஆனால் சாசனம் படத்தின் படப்பிடிப்பு செட்டி நாட்டில் நடத்தப்பட்டதில் அர்த்தபூர்வமான விஷயம் அடங்கியிருக்கிறது. அதன் கதைக்களமே செட்டிநாடு தான். படப்பிடிப்பு நடத்தப்பட்ட கண்டணூர் கிராமத்தில்தான் சாசனம் படத்தின் கதையும் நிகழ்கிறது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை. கதைக்களத்திலேயே, நிஜமான மனிதர்களின் மத்தியில் படப்பிடிப்பு நடத்தியது சாசனம் படத்தின் கதைக்கு கூடுதல் வலிமையை சேர்த்திருப்பது மட்டுமல்ல, நகரத்தார்களின் வாழ்க்கைப் பதிவாகவும் சாசனம் படம் புதுப்பரிணாமம் பெற்றிருக்கிறது.

செட்டிநாட்டுக் கலாச்சாரத்தின் இன்றைய யதார்த்த நிலையை அசலாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதனாலேயே சாசனம் - நகரத்தார்களின் வாழ்க்கை சரிதமாகி இருக்கிறது. செட்டிநாட்டுக் கலாச்சாரப் பெருமைகளைக் நகரத்தார் கட்டிக்காக்கும் விதம், வாழ்க்கையின் துயரச்சூழலில் சில நேரங்களில் தன் கலாச்சாரத்தை இழக்க நேரும் நிர்ப்பந்தம் அவர்களை ஆட்கொள்ளும்போது அடையும் துயரம் என அவர்களின் உணர்வுகள் படம் முழுக்க வியாபித்து நிற்கின்றன.

கதை நிகழும் பகுதியிலேயே சாசனம் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும் கலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருதுவின் பணியும் அலாதியானது. பின்புலத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நுணுக்கமாகக் கிரகித்து தன் பங்களிப்பை அளித்திருக்கிறார் மருது.இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் அரவிந்த்ஸாமி! சுவீகாரம் கொடுக்கப்பட்ட ஒருவனின் மனத்துயரத்தை இத்தனை அழகாய் எவரால் வெளிப்படுத்த முடியும்? அவரது மனைவியாக கௌதமி! நமக்கும் இப்படி ஒரு மனைவி வாய்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம். அவருக்குக் கொடுக்கப்பட்ட பின்னணிக் குரல்தான் ஆண்தனமாக பயமுறுத்தியது.சரபோஜி மன்னரின் வம்சத்தில் வந்த சரோஜி எனும் ஏழைப்பெண்ணாக ரஞ்சிதா! இவரது திரைவாழ்க்கையிலும் பேர் சொல்லும் பாத்திரம்.மகேந்திரனின் படங்களில் இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும் பலமாக இருக்கும். சாசனம் படத்திற்கோ இசை பாலபாரதி! மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது துரதிஷ்டம்.உலகத்தரம் என்பது நவீன சாதனங்களைக் கொண்டு படம் எடுப்பதல்ல, அந்தப்படம் உருவாகும் சமூக அமைப்பின் கலாச்சாரத்தை, யதார்த்தத்தை நசுக்காமல் உள்ளது உள்ளபடி எடுப்பதுதான்! அந்த அடிப்படையில் சாசனம் உலகத்தரத்துடன் எடுக்கப்பட்ட படம்.மகேந்திரனின் முந்தையப்படைங்களைப் போலவே சாசனம் படமும் ஆரோக்கியமான சினிமாவை விரும்புகிறவர்களின் மத்தியில் நல்ல ரசனையை வளர்க்கும். திரைப்படம் என்பதால் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

No comments:

Post a Comment