Sunday 28 March 2010

வசந்தபாலனுக்கு வந்தனம் சொல்ல வேண்டும்.

திரைப்படம் எடுக்கிற பெயரில் நிறைய பேர் கோடம்பாக்கத்தில் செலுலாய்டு குப்பைகளையே உற்பத்தி செய்கிறார்கள். மிகச் சிலர்தான் சமூகத்துக்கு அவசியமான, மக்களுக்கான திரைப்படங்களை எடுக்கிறார்கள். அவர்களில் இயக்குநர் வசந்தபாலன் முக்கியமானவர். வெற்றியடைந்தவர்களின் கதைகள் மட்டுமே திரைப்படத்துக்குத் தகுதியானவை என்ற அசட்டு நம்பிக்கையை அடித்து நொறுக்குவதுபோல், இவர் இயக்கிய 'வெயில்' வாழ்வில் தோற்ற ஒருவனின் கதை!
வெயில் படத்தின் மூலம் தமிழ்சினிமாவை எல்லைகள் கடந்து உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற வசந்தபாலன், அங்காடித்தெரு படத்தையும் அவ்விதமே உருவாக்கி இருக்கிறார். அதற்காக நல்ல சினிமாவை விரும்புகிற ஒவ்வொருவரும் வசந்தபாலனுக்கு வந்தனம் சொல்ல வேண்டும்.
திரைப்படங்களுக்கான கதைகளை வெளிநாட்டு திரைப்படங்களின் டி.வி.டி.யில் தேடுவதே கோடம்பாக்கத்தின் குல வழக்கம். அங்காடித்தெரு திரைப்படத்தின் கதையை வசந்தபாலன் வழக்கம்போல் வாழ்க்கையிலிருந்து பெயர்த்தெடுத்து, ரத்தமும் சதையுமாக செலுலாய்டில் வடித்திருக்கிறார்.
கான்க்ரீட் காடாகிவிட்ட சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ரங்கநாதன் தெருதான் - அங்காடித்தெரு. தலைப்பு மட்டுமல்ல, கதைக்களமும்..! அலங்கார ஜொலிப்புடன் கம்பீரமாய் நிற்கும் வணிக நிறுவனங்களில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு கொத்தடிமைகளாய் வாழும் பாவப்பட்டவர்களே படத்தின் கதை மாந்தர்கள். அந்த இருள்முகங்கள் மீது சினிமா வெளிச்சத்தை பாய்ச்சியிருப்பது மட்டுமல்ல, மனிதவளங்களை மக்கிப்போகச்செய்யும் வர்த்தக வர்க்கங்களின் குரூர முகத்தில் கோபாவேசமாய் குத்துவிட்டிருக்கிறார் வசந்தபாலன்.
வாழ்க்கை எல்லோருக்கும் வரமாகிவிடுவதில்லை. பலருக்கும் சாபமாகவே இருக்கிறது. அதிலும் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சாபமே சாசுவதம். அங்காடித்தெருவின் கதைநாயகன் ஜோதிலிங்கத்தின் வாழ்க்கையும் இவ்வாறே.
தெற்கத்திக்கிராமம் ஒன்றில் சந்தோஷமாக வளைய வரும் ஜோதிலிங்கத்தின் அப்பா விபத்தில் மாண்டுபோகிறார். பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியும், குடும்பத்துக்கு மூணுவேளை சோறுபோடுவதை லட்சியமாக்கிக் கொள்வதைத்தவிர ஜோதிலிங்கத்துக்கு வேறு வழியில்லை. கண்ணீரையும், கனவையும் ஒருசேரத்துடைத்துக் கொண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்ட கடையொன்றுக்கு வேலைக்காரனாய் வருகிறான். கூடவே நண்பன் பாண்டியும்.
அங்கே விற்கப்படுவது துணிகள், பாத்திரங்கள் மட்டுமல்ல, கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் மனிதநேயமும்தான். கொத்தடிமைக்கூடத்தை நினைவூட்டும் உணவுக்கூடம், உறங்குமிடம் என எல்லாவற்றிலும் மனித உரிமை அங்கே காலடியில் போட்டு மிதிக்கப்படுகிறது. ஆனாலும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் குடும்பத்தை எண்ணி வேலையில் தொடரவே செய்கிறார்கள் ஜோதிலிங்கமும், பாண்டியும்.
அதே கடையில், அதே கொடுமைகளை சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண் சேர்மக்கனி. ஜோதிலிங்கத்துக்கும், கனிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம். சூப்பர்வைசர் கருங்காலியிடம் தன்னை மாட்டிவிட்ட கனியை பழிவாங்க, ஜோதிலிங்கமும் அவளை மாட்டிவிடுகிறான் - அதன் விபரீதம் புரியாமலே. கனியை அடித்து உதைக்கும் கருங்காலி, மறைவுக்கு அழைத்துப்போய் அவளின் மாரை கசக்கிய கொடுமையைக் கேட்டு உடைந்துபோகும் ஜோதிலிங்கத்துக்கு, கனி மீது கரிசணம் சுரக்கிறது. கரிசணம் நட்பாகி, ஒரு மொட்டு மலர்வதைப்போல் வெகு இயல்பாக அவர்களின் நட்பு காதலாய் பரிணமிக்கிறது. இதற்கிடையில், அங்கே வேலை பார்க்கும் சக ஊழியர்களான சௌந்தரபாண்டி - ராணி இருவரும் காதலித்து, அது கருங்காலிக்குத் தெரியவர, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் மாடியிலிருந்து கீழே குதித்து சிதறிப்போகிறாள் ராணி. வேலையிலிருந்து துரத்தப்பட்ட சௌந்தரபாண்டியோ மனச்சிதைவுக்குள்ளாகிறாள். இவர்களுக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகு கனியை விட்டு விலக நினைக்கும் ஜோதி, அவளை இழக்க மனமில்லாமல் மனசில் அவளை மேலும் இறுக்கிக் கொள்கிறான்.
இவர்களின் காதலும் ஒருநாள் கருங்காலிக்கும், கடைமுதலாளியான அண்ணாச்சிக்கும். தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது அங்காடித்தெரு திரைப்படத்தின் மிச்ச கதை.
வணிக நிறுவனங்களில் தொழிலாளர்கள் நடத்தப்படும்விதம், அங்கே மீறப்படும் மனித உரிமைகள் என்ற விஷயம் உண்மையில் ஒரு ஆவணப்படத்துக்கான உள்ளடக்கம். அங்கே வேலை செய்யும் இருவருக்குமான காதல் என்ற இழையைக் கோர்த்து அதை வெகு மக்களுக்கான திரைப்படமாக்கும் உத்தியில் வெற்றியடைந்திருக்கிறார் வசந்தபாலன்.
கமர்ஷியல் சினிமா எனப்படுகிற வெகுஜன திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் கமர்ஷியல் என்பதற்கான அர்த்தங்கள் அருவறுப்பான ஒன்றாகவே இருக்கின்றன. அசிங்கமான நடன அசைவுகள் கொண்ட கதாநாயகனின் அறிமுகப்பாடல், விரச வீச்சமடிக்கும் நகைச்சுவைக்காட்சிகள், பாலியல் பாடங்களாக காதல் காட்சிகள், வன்முறையை மண்டைக்குள் திணிக்கும் சண்டைக்காட்சிகள், அரைகுறை ஆடையில் குமட்ட வைக்கும் குத்துப்பாட்டு - என தமிழ்த்திரைப்படங்கள் வன்முறை மற்றும் ஆபாசங்களின் தொகுப்பாகவே இருக்கின்றன. வசந்தபாலன் இவற்றை எல்லாம் துச்சமாய் எண்ணி தூக்கி எறிந்திருப்பது மட்டுமல்ல, திரைப்படத்துக்கான கதைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? ஒரு திரைப்படத்தை எவ்வாறு எடுக்க வேண்டும் என்றும் பிற இயக்குநர்களின் பிடறியில் தட்டியிருக்கிறார்.
ஒரு நேர்த்தியான திரைப்படத்தில், அதன் திரைக்கதையும், வசனமும், ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் எப்படி பங்காற்ற வேண்டும் என்பதற்கும் அங்காடித்தெரு உதாரண சினிமாவாக இருக்கிறது. மிக முக்கியமாக வசனம்.! ஜோதிலிங்கத்தின் மீதான கோபம் தணியாத ஒரு தருணத்தில் கனி சொல்லும் வசனம். "இவன் ஒருத்தன்கிட்டேயாவது மானம் ரோஷத்தோட இருக்கிறேனே" விபச்சாரத் தொழிலிருந்து விலகி, குட்டையான கணவனுக்கு மனைவியாகி, குடும்பப் பெண்ணாக மாறியவள், தனது கணவனைப் போலவே குழந்தையும் குட்டையாகப் பிறந்ததற்கு வருந்தாமல், மாறாக மகிழ்கிறாள். அவளது மகிர்ச்சிக்குக் காரணம்..: "இனி யாரும் இந்தப் பிள்ளையை எவனுக்குப் பெத்தாளோன்னு சொல்ல மாட்டாங்களே" இப்படி, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளும் கச்சிதமான வார்த்தைகளாய்..!ரங்கநாதன் தெரு என்கிற ஜன சமுத்திரத்தில் நித்தம் நித்தம் நீந்திக்கொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளாய் சில பாத்திரங்களையும் மனசுக்கு நெருக்கமாக்கியிருக்கிறார் இயக்குநர். வேலையிலிருந்து விரட்டப்பட்டு ஜோதிலிங்கமும், கனியும் நிர்கதியாய் நிற்கும்போது புது வாழ்க்கைக்கான வெளிச்சத்தைக்காட்டும் வயதான நடைபாதை வியாபாரி சிறு உதாரணம்!
ரங்கநாதன் தெருவும், அங்குள்ள வணிகநிறுவனமும் கதைக்களமானதால் சம்பவங்கள் ஒரே இடத்தில் நிகழ்வது தவிர்க்கவே முடியாத சிக்கல்தான். இந்த இக்கட்டிலிருந்தும், மூச்சடைக்கும் நெருக்கடியிலிருந்தும் பார்வையாளனை விடுவித்து, சற்றே காற்றாட வெளியே கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயமும் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜோதிலிங்கமும், கனியும் தங்களின் கடந்த கால காதலை பகிர்ந்து கொள்வதன் மூலம், கதை கிராமத்துக்கு சென்று திரும்புவதும், ஆசாரமான பிராமண வீட்டில் வேலை பார்க்கும் கனியின் தங்கையை பின் தொடர்ந்து செல்லும் கிளைக்கதையும் கூட இதன்பொருட்டே விவரணை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஜோதிலிங்கமாகவே வாழ்ந்து பார்த்திருக்கும் மகேஷை ஒரு புதுமுகமாகவே எண்ண முடியவில்லை. அண்ணாச்சி கடை ஊழியர்களின் வலியும், வேதனையும் நமக்குள்ளும் இறங்கி, நாம் கனத்துப்போக இவரது நடிப்பும் காரணமாக இருக்கிறது. ஆதரவற்ற ஒரு குடும்பத்தின் மூத்தபெண்ணாய் ஒட்டுமொத்த துயரத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டு வளைய வரும் சேர்மக்கனியை எத்தனை வருடங்களானாலும் மறக்கவே முடியாத அளவுக்கு அந்த பாத்திரமாகவே நம் மனசை ஆக்ரமித்திருக்கிறார் அஞ்சலி. கடை முதலாளிஅண்ணாச்சியாய் பழ. கருப்பையா, அவரது விசுவாசமான கைத்தடி கருங்காலியாய் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நண்பன் பாண்டி என ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இயக்குநர் தேர்வு செய்த முகங்கள் அவர் எடுத்துக் கொண்ட கதைக்கு மேலும் நம்பகத்தன்மையை தந்திருக்கின்றன.
காதலியை தேவதையாகவும், உலக அழகியாகவும் ஒப்பீடு செய்யும் தமிழ்த்திரைப்படங்களின் பாடல்களிலிருந்து மாறுபட்ட, 'அவள் அப்படியொன்றும் அழகில்லை' என்கிற மிகைப்படுத்தப்படாத இயல்பான பாடல் வரிகளும் கூட அங்காடித்தெரு படத்தை தனித்துவப்படுத்தியிருக்கின்றன.
சரவணா ஸ்டோர்ஸ்களுக்கும், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்களுக்கும் செல்லும்போது இது நாள்வரை அங்குள்ள ஊழியர்களின் முகங்கள் மனதில் பதிந்ததில்லை. அவர்களுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளில்தான் நம் கவனம் இருந்திருக்கிறது. இனி துணி அடுக்குகள் மங்கலாகி, ஜோதிலிங்கங்களும், சேர்மக்கனிகளுமே நம் கவனத்துக்குரியவர்களாக இருப்பார்கள்.

திரையுலக ஜொள்ளர்கள்!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் முதன்முறையாக இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடிக்க, உருவாகியிருக்கும் ரெட்டச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஹிந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவில் பேசிய பலரும் ஐஸ்வர்யா ராயின் அழகை ரொம்பவே வர்ணித்து பேசினார்கள். நடிகர் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் பல கவிதை(?) வரிகளை கொட்டினார். ''சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழிதான் ரெட்டைச்சுழி'' என்றெல்லாம் விவஸ்தை எல்லாம் வழிந்தார். அது மட்டுமல்ல, ''விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜ்மஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்'' என்றும் ஏடாகூடமாகவும் பேசினார். பார்த்திபன் பாணியில் பலரும் ஐஸ்வர்யாராயைப் பார்த்து பகிரங்கமாகவே ஜொள்ளுவிட, முதியவரான கே.பாலசந்தரும், ''நான் இந்த விழாவுக்கு வரும்போது படத்தின் டிரைலரை பார்க்கும் சந்தோஷத்தில் வந்தேன். மேடையேறியதும் சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த சீட் எனக்கு. இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட விட்டுறணும்.'' என்று தன் பங்குக்கு வழிந்தார். பாரதிராஜா பேசும்போது, ''எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க'' என்று கண்ணீர்விடாத குறையாக வருத்தப்பட்டார். அந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை சினிமாக்காரர்களும் ஐஸ்வர்யாராயின் அழகை வர்ணித்து உளறிக் கொட்ட, இயக்குநர் ஷங்கர் மட்டும் ஐஸ்வர்யாராயை அறிவாளியாகவும், சிறந்த உழைப்பாளியாகவும் சிலாகித்தார். இறுதியாக பேச வந்த வைரமுத்து திரையுலக ஜொள்ளர்கள் அனைவரையும் கண்டிப்பதுபோல் அழகாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ''ஐஸ்வர்யாராய் வெறும் நடிகை அல்ல, அமிதாப்பின் மருமகள். அமிதாப் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம். அப்பேற்பட்ட குடும்பத்தின் மருமகளை நாம் கண்ணியமாகப் பார்க்க வேண்டும்!'' சிற்றின்பத்தில் திளைக்கும் சில்மிஷப்பேர்வழிகளான சினிமாக்காரர்களை இதைவிட எப்படி தலையில் குட்ட முடியும்?