Sunday 28 March 2010

திரையுலக ஜொள்ளர்கள்!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் முதன்முறையாக இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடிக்க, உருவாகியிருக்கும் ரெட்டச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஹிந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவில் பேசிய பலரும் ஐஸ்வர்யா ராயின் அழகை ரொம்பவே வர்ணித்து பேசினார்கள். நடிகர் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் பல கவிதை(?) வரிகளை கொட்டினார். ''சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழிதான் ரெட்டைச்சுழி'' என்றெல்லாம் விவஸ்தை எல்லாம் வழிந்தார். அது மட்டுமல்ல, ''விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜ்மஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்'' என்றும் ஏடாகூடமாகவும் பேசினார். பார்த்திபன் பாணியில் பலரும் ஐஸ்வர்யாராயைப் பார்த்து பகிரங்கமாகவே ஜொள்ளுவிட, முதியவரான கே.பாலசந்தரும், ''நான் இந்த விழாவுக்கு வரும்போது படத்தின் டிரைலரை பார்க்கும் சந்தோஷத்தில் வந்தேன். மேடையேறியதும் சந்தோஷம் இரட்டிப்பாகி விட்டது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த சீட் எனக்கு. இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட விட்டுறணும்.'' என்று தன் பங்குக்கு வழிந்தார். பாரதிராஜா பேசும்போது, ''எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க'' என்று கண்ணீர்விடாத குறையாக வருத்தப்பட்டார். அந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை சினிமாக்காரர்களும் ஐஸ்வர்யாராயின் அழகை வர்ணித்து உளறிக் கொட்ட, இயக்குநர் ஷங்கர் மட்டும் ஐஸ்வர்யாராயை அறிவாளியாகவும், சிறந்த உழைப்பாளியாகவும் சிலாகித்தார். இறுதியாக பேச வந்த வைரமுத்து திரையுலக ஜொள்ளர்கள் அனைவரையும் கண்டிப்பதுபோல் அழகாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ''ஐஸ்வர்யாராய் வெறும் நடிகை அல்ல, அமிதாப்பின் மருமகள். அமிதாப் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம். அப்பேற்பட்ட குடும்பத்தின் மருமகளை நாம் கண்ணியமாகப் பார்க்க வேண்டும்!'' சிற்றின்பத்தில் திளைக்கும் சில்மிஷப்பேர்வழிகளான சினிமாக்காரர்களை இதைவிட எப்படி தலையில் குட்ட முடியும்?

1 comment:

  1. நடிகை என்றால் “இப்படி”தான் பார்க்க வேண்டும் என்ற பொது புத்தி சினிமா உலகில் மட்டுமல்ல - பொதுஜனத்திடமும் இருப்பதுதான்.!! கற்பு மேட்டரில் கலாட்டா பண்ணும் கூட்டம் கூட கண்ணியம் கெட்டுத்தான் பெண்களை பார்க்கிறது..!! எல்லாம் ஊருக்கு உபதேசம்..!!

    ReplyDelete