Friday 10 July 2009

சினிமாக்காரர்களின் வீதி நாடகங்கள்


பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டது என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். ஒரு செயலைச் செய்கிறபோது, எதிர்பார்த்த விஷயம் நடக்காமல், அதற்கு மாறாக, எதிர்மறையான விளைவு ஏற்டுவதைக்குறிக்கும் இதை சினிமாவில் உள்ளவர்கள் ‘ஆன்ட்டி க்ளைமாக்ஸ்’ என்பார்கள்.

இலங்கையில் அப்பாவித்தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு குண்டுவீச்சு நடத்துவதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் தமிழ்த்திரைப்படத்துறை யினர் நடத்திய கண்டனப் பேரணியின் முடிவும் இப்படித்தான் ஆன்ட்டி க்ளைமாக்ஸில் முடிந்தது. யாரை திருப்திபடுத்துவதற்காக இப்படியொரு பேரணியை நடத்தினார்களோ, அவர்களாலேயே இயக்குநர் அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சிங்கள அரசுக்கு எதிராக சீறிக்கிளம்பிய தமிழ்ப்படஇயக்குநர்கள், தங்களில் இருவரை தமிழகஅரசு சிறையில் தள்ளியதற்குக் குறைந்தப்பட்ச எதிர்ப்புணர்வைக் கூட காட்டாமல், கோழைகளாக அஞ்சி நடுங்கி அமைதிகாத்தார்கள்.இலங்கைப் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்துறையினரின் எழுச்சிமிக்க போராட்டத்தை நான் என்னவோ எள்ளிநகையாடுவது போலவும், கொச்சைப்படுத்துவது போலவும் சிலருக்குத் தோன்றக் கூடும். உணர்ச்சிவசப்படாமல், இப்பிரச்சனையை உற்றுநோக்கி னால், அதற்குப்பின்னால் உள்ள அரசியலும், திரைப்படத்துறையினர் நடத்திய நாடகமும் புரியும்.

முதலில் திரைப்படத்துறையினரின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி இருக்கின்றன என்று மேற்பார்வையிடுவோம். இவர்களில் எத்தனை பேர் தமிழ்ச்சமூகத்துக்கு பயனுள்ள படைப்புகளை தந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தமிழ்மக்களின் வாழ்வியலை, அவர்களின் பிரச்சனைகளை தங்களின் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள்? எத்தனை இயக்குநர்களின் படங்களில் தண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நெசவாளர்களின் பிரச்சனை போன்ற தமிழ்நாட்டின் ஜீவாதார விஷயங்கள் இடம்பெற்றிருக் கின்றன?

மற்றவர்களைவிடுங்கள், தமிழர்களுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பாரதி ராஜா, ஆர்.கே.செல்வமணி போன்ற இயக்குநர்களின் படங் களிலாவது இப்படிப்பட்ட மக்கள்பிரச்சனைகள் கதையாக, கருவாக, செய்தியாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனவா?‘பதினாறு வயதினிலே’ தொடங்கி பாரதிராஜாவின் எல்லாப் படங்களிலும் காதல்தானே தமிழர்களின் தலையாயப்பிரச்சனையாகச் சொல்லப்பட்டது? சப்பாணியின் காதல் (பதினாறு வயதினிலே), பெருசுவின் காதல் (முதல் மரியாதை), பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காதவனின் காதல் (கடலோரக்கவிதைகள்), பார்வையற்றவனின் காதல் (காதல் ஓவியம்) என பாராதிராஜா தன் படங்களின் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக செய்தது காதல் ஆய்வுதானே தவிர, சமூகப்பிரச்சனைகள் குறித்த அலசலோ, அக்கறையின் வெளிப்பாடோ அல்லவே!

பாரதிராஜாவையாவது வேதம்புதிது, புதுமைப்பெண் போல் ஒரு சில நல்ல படங்களை எடுத்திருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடியும். ஆர்.கே.செல்வமணியின் படங்களில் இப்படி ஒரு படத்தைக் கூட குறிப்பிட முடியாது. ஏனெனில், அவரது முதல்படமான ‘புலன்விசாரணை’ தொடங்கி செல்வமணி இயக்கிய எல்லாப்படங்களும் வன்முறை, அடிதடி, ஆபாசம் போன்ற அம்சங்களைக் கொண்டிருந்த வியாபாரசினிமாக்கள்தான்.இப்படியாக தங்களின் படங்களின் மூலம், தமிழ் மக்களுக்கு உபயோகமாக, உருப்படியாக எதையுமே செய்யாத இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்காக வீதிக்கு வருவது கேலிக்கூத்து அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

எந்தவொரு மாற்றமும், சீர்திருத்தமும், புரட்சியும் முதலில் தன் வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பார்கள். அதுவே உண்மையானதாக இருக்கும். தன்னை சுத்திகரித்துக் கொள்ளாமல் சமூத்தை சுத்தம் செய்யக் கிளம்புவது ஊருக்கு உபதேசம் சொல்வதைப் போன்ற ஒன்றுதான். திரைப்படத்துறையினர் மக்கள் பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பதையும் இப்படித்தான் வகைப் படுத்த முடியும். ஏனெனில் தன் வீட்டை, அதாவது தமிழ் திரைப்படங்களை அழுக்காக வைத்திருப்பது மட்டுமல்ல, அந்த அழுக்குகளின் மூலம் நம் சமூகத்தையும் அசுத்தமாக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் அதே மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை எப்படி நம்ப முடியும்?

கேமரா, லைட்ஸ், ஆக்ஷன், ஸ்டார்ட், கட் இல்லாமல் நடத்தப்படுகிற நாடகமாகவே இவர் களின் செயல்களை எண்ண வேண்டியிருக்கிறது.சமூகத்துக்குப் புறம்பான திரைப்படங்களை எடுப்பதினாலேயே, மக்களின் பிரச்சனைகளைப் பற்றி இவர்கள் பேசக்கூடாதா? அப்பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தக்கூடாதா? என்று சிலருக்குத் தோன்றலாம். கள்ளச்சாராயம் காய்ச்சி அப்பாவி மக்களின் வாழ்வை நாசமாக்கும் ஒரு கள்ளச்சாராய வியாபாரியோ அல்லது விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒரு விலைமாதுவோ மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்வது எப்படி ஏற்புடையது இல்லையோ, அதுபோல்தான் திரைப்படத்துறையினரின் போராட்டங்களும்.

அது மட்டுமல்ல, இதுவரை திரைப்படத்துறையினர் நடத்திய எந்தப்போராட்டமாவது தொடர் போராட்டமாக நடந்திருக்கிறதா? அல்லது மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆதரவாக மக்களையும் களத்தில் இறங்க வைத்திருக்கிறதா? ஒரு போதும் இப்படியெல்லாம் நடைபெற்றதில்லை. காரணம்.. திரைப்படத்துறையினரின் இப்படிப்பட்ட ‘ஒருநாள் நாடகத்தை’ மக்கள் தெளிவாகவேப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இவர்களின் உண்ணாவிரத்தையும், கண்டனப்பேரணியையும் ஒரு கலைநிகழ்ச்சியாகவே மக்கள் எண்ணுகிறார்கள்.

மக்களை விடுங்கள், திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் கூட கலை நிகழ்ச்சி நடத்தும் மனோபாவத்தில்தான் மக்கள் பிரச்சனைகளையும் அணுகுகிறார்கள். இல்லை என்றால் காவிரி பிரச்சனைக்காக நெய்வேலிக்கு சென்று போராட்டம் நடத்துவது, இலங்கை பிரச்சனைக்காக ராமேஸ்வரம் சென்று போராட்டம் நடத்துவது என்று பிரச்சனையை திசைவிருப்பும்விதமாக நடந்து கொள்வார்களா? இதெல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்ற எண்ணத்தில்தான் இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கருப்புப்பணமும், கள்ளக்காதலும் திரைப்படத்துறையினரின் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த விஷயம். அதனால் அரசாங் கத்துக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையில் இருக்கும் இவர்கள், எந்த அரசியல்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை திருப்திப் படுத்த நினைக்கிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போதும், கலைஞர் மு.கருணாநிதி இருந்தபோதும் திரையுலகம் சார்பில் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டதெற்கெல்லாம் இதுவே காரணம் என்பது நமக்கு புரியாமலில்லை.

தவிர, திரைப்படத்துறைக்கு அரசாங்கத்திடம் சலுகைகளைக் கேட்டு அடிக்கடி முதல்வரை சந்தித்து தலையை சொறிந்து கொண்டு நிற்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். கரும்புக்கு கூடுதல் விலை கேட்கும், நெல்லுக்கு கூடுதல் விலை கேட்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டாலும், திரைப் படத்துறையினரின் கோரிக்கைகள் எப்போதுமே மறுக்கப்பட்ட தில்லை.

கேளிக்கை வரி குறைப்பு, பிறகு அடியோடு ரத்து, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கட்டணக்குறைப்பு, மானியம் அதிகரிப்பு என ஏறக்குறைய திரைப்படத்துறையினரின் எல்லா கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.அதற்கான பிரதிஉபகாரமாகவே காவிரி பிரச்சனை, ஒகேனேக்கல் பிரச்சனை, இலங்கைப்பிரச்சனை என்று திரைப்படத்துறையினர் உண்ணாவிரதம், பேரணி என்று வீதிக்கு வருகிறார்கள் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

ஆக இவர்கள் போராடுவது மக்களுக்காக அல்ல, ஆட்சியிலிருப்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக நடத்தப்படும் நாடகமே அது! அப்படி நடத்தப்பட்ட நாடகங்களில் ஒன்றுதான் ராமேஸ் வரத்தில் நடைபெற்ற இலங்கைப்பிரச்சனைக்கான போராட்டமும். தாங்கள் எடுக்கும் திரைப்படங்களின் மூலம் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் இவர்கள், ஆட்சியிலிருப்பவர்களை திருப்திப்படுத்த நடத்தும் இப்படிப்பட்ட போராட்ட நாடகங்களின் மூலமும் அதே காரியத்தை செய்கிறார்கள். இந்த நாடகங்களை மக்கள் சரியாய் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment