Sunday 12 July 2009

ஒருநாள் கமலிடமிருந்து அழைப்பு


கமல் அழைத்திருந்தார். விஷயம்? விருமாண்டி என்று பெயர் மாற்றப்பட்ட சண்டியர் படம் பற்றி பத்திரிக்கைகளில் பல வாறு செய்திகள். சண்டியராய் சத்யராஜ் நடிக்கிறார் என்றும்,, நாஸர் நடிக்கிறார் என்றும், இன்னும் எக்குத்தப்பான செய்திகள் எல்லாம் மக்களை குழப்பிக் கொண் டிருந்தன. அது மட்டுமல்ல கமலையும் கவலைக் குள்ளாக்கியிருந்தது. அதன்பொருட்டே கமல் அழைத்திருந்தார்.


‘’சண்டியர் படத்தை பற்றிய செய்திகள் போட்டோக்களை விரைவில் உங்களை எல்லாம் அழைத்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். அதுவரை சண்டியர் படத்தை பற்றி எதுவும் எழுதாமல் இருக்க வேண்டும். அதை தனிப்பட்ட முறையில் சொல்லவே உங்களை அழைத்தேன்,’’என்ற கமல் வந்த வேகத்தில் ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு விடைபெற எத்தனித்தார். எழுந்த அவரை மறுபடி அமர வைத்தது நான் கேட்ட கேள்வி. கமலிடம் கேட்க வேண்டும் என்று பல கேள்விகள் உண்டு. அதற்கு பதில் பெற இதைவிட சிறந்த சந்தர்ப்பம் அமையுமா என்ன?அவை அப்புறம். முதலில், கமல் அழைத்ததின் காரணத்திலேயே எனக்கு கருத்து மாறுபாடு உண்டு, அதையே கேள்வியாக்கி உரையாடலை ஆரம்பித்தேன்.


எந்தவொரு எதிர்பார்ப்புக்குரிய விஷயம் பற்றியும் அதிகாரபூர்வ செய்தி வரும் முன்பு யூகங்களும் வதந்திகளும் செய்திகளாக வருவது சகஜம்தான், அதற்கு திரைப்படமும் விதிவிலக்கில்லை, அதுவும் கமல் போன்ற மூத்த, முன்னணி கலைஞன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் மத்தியில் உலா வரும் கேள்வி. அதற்குத்தான் தீனி போடுகின்றன பத்திரிகைகள். அவற்றில் கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய். இதைப் போய் இத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா கமல் ஸார்?அதுவும் இத்தனை காலமாக இதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அமைதிகாத்துவிட்டு இப்போது பதற வேண்டிய அவசியம் என்ன?’’


நான் இப்படிப் கேட்டதும் கமல் ஒரு கணம் அதிர்ச்சி யடைந்தார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு உட்கார்ந்தார்.


‘இன்று செய்ததை என் ஒவ்வொரு படத்தின் போதும் செய்ய நினைத்திருக்கிறேன், வேறு தயாரிப்பாளர் என்பதால் செய்ய இயலாமல் போய்விட்டது, உதாரணத்துக்கு அன்பே சிவம் படம் பண்ணும் போது உங்களை இப்படி அழைத்து அன்பே சிவம் படத்தைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று சொன்னால் அந்தத் தயாரிப்பாளர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்னடா நம்ம படத்தைப் பற்றி எழுத வேண்டாம் என்று இவர் சொல்கிறாரே என்று வருத்தப்படக்கூடும். சண்டியரில் இப்படிப் பட்ட சிக்கல் இல்லை. இது என் படம். சண்டியர் படம் பண்ணப்போறது உண்மை. அது சம்மந்தமாக சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அதற்குள் கண்டமேனிக்கு செய்திகள் வருகின்றன. அவற்றில் சில செய்திகள் பேச்சுவார்த்தையை பாதிக்கக் கூடிய தாகவும் இருக்கின்றன. இதை அலட்சியப்படுத்திவிடலாம் தான். ஹேராம் போல் கதையாகிவிட்டால்?’’ என்று நிறுத்தினார் கமல்.


அட, அதென்ன ஹேராம் கதை?


‘ஹேராம் எப்படிப்பட்ட கதை என்று எல்லாருக்கும் தெரியும். அந்த படம் அண்டர்புரடக்ஷனில் இருந்த போது இதே போல்தான் இஷ்டத்துக்கு எழுதினார்கள். காந்திக்கு விரோதமான படம் என்று சில பத்திரிகைகள் எழுதியதை நம்பி ஜெயந்தி நடராஜன் அறிக்கையே விட்டுவிட்டார். அதற்கு என் ரசிகர்கள் சிலர் பதில் கொடுத்து அறிக்கைப் போரே நடந்துவிட்டது. வெளியூர் போய்விட்டு வந்த எனக்கு அதை எல்லாம் கேள்விப்பட்டதும் தலையேச்சுற்றிவிட்டது. உண்மை இல்லாத ஒரு விஷயத்தை வைத்து இவ்வளவு பிரச்சனைகள், இதை என்னவென்று சொல்வது?’’


யூகங்கள் செய்தி அவதராம் எடுப்பதில் இத்தனை சிக்கல்களா? ஏன் வம்பு? யூகங்கள் வரும் முன்பே அதிகாரபூர்வச் செய்திகளை ஊடகங்களுக்குக் கொடுத்துவிடலாம்தானே? பொத்திப்பொத்தி வைக்கும் போதுதான் அதை அறிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாகிறது.’’


‘அதுவும் ஆபத்துதான். ஒரே நேரத்தில் பல பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதும்போது அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும், அப்போது படம் வெளிவந்தால் சரி. தாமதமாகும்போது அதெல்லாம் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சண்டியர் படத்தை இப்போதுதான் தொடங்குகிறோம். அதற்குள் அதிக அளவு விளம்பரம் வேண்டாமே என்று பார்க்கிறேன். படம் தொடக்கநிலையில் இருக்கும் போது அதீத விளம்பரம் வருவது அத்தனை ஆரோக்கியமில்லை, ஆபத்தான விஷயம், ஆளவந்தான் படத்தின் போது அதுதானே நடந்தது? மாபெரும் பப்ளிஸிட்டிதான் அதற்கு வினையானது,’’


கமல் சொல்லும்போது என்னையும் அறியாமல் நமுட்டுச் சிரிப்பு வந்ததை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் நல்ல நகைச்சுவையைக் கேட்கும்போது சிரிப்பு வரத்தானே செய்யும்? கமல் அதை கவனிக்கவில்லை, பேச்சைத் தொடர்ந்தார்...


‘இன்னொரு காரணம் படத்தை பெரிய விலைக்கு விற்றது, சின்ன விலைக்கு விற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.’’

என்று கமல் சொன்ன போது குறுக்கிட்டேன்.


ஆளவந்தான் தோற்றுப்போனதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் சப்பைக்கட்டு தவிர வேறென்ன? அதிக பப்ளிஸிட்டி, பெரிய விலைக்கு விற்றது என்பதையெல்லாம்விட ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு படத்தில் விஷயம் இல்லை என்பதுதானே நிஜம்? அதை மறந்துவிட்டீர்களே கமல் ஸார்?’’


என் வாதத்தை கமல் ஒப்புக்கொள்வதாக இல்லை. சப்பைக் கட்டுகள் தொடர்ந்து, ஒரு கட்டத்தில்,‘கீழே துப்பின சாக்லெட்டை மறுபடி கையால எடுக்கிற மாதிரிதான் இதுவும், இப்ப அதைப் பத்தி பேசிப் பிரயோஜன மில்லை,’’ என்று அவரே ஆளவந்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.


அடுத்த விஷயத்துக்குப் போனேன்.


அன்பேசிவம் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்பது படத்தின் டைட்டிலில் மட்டுமே இருந்தது. படத்தில் அவரது பாணி ஒரு காட்சியிலும் இல்லை. கமலின் ஆளுமைதான் எங்கும். இந்தப் படத்தை ஆரம்பத்தில் ப்ரியதர்ஷன் இயக்குவதாக இருந்து, ஏனோ அவர் கழன்று கொண்டார். கமலுடன் அவருக்கு ஒத்துப்போகவில்லை என்று செய்திகள் விழுந்தன காதில். இவற்றை எல்லாம் குறிப்பிட்டு கமலிடம் கேட்டேன்...


பெரிய இயக்குநருடன் இணைந்தால் படம் ஆரம்பிக்கும் முன்பே உரசல் வந்துவிடுகிறது, இளைய இயக்குநர்களுடன் இணையும்போது அவர்களை இய(ங்)க்க விடாமல் நீங்களே டாமினேட் செய்கிறீர்கள். நியாயமா இது?’’என்பதே என் கேள்வி.


‘என்ன தப்பு? எம்,ஜி,ஆர் நடித்த படங்களை மக்கள் எம்.ஜி.ஆர் படம் என்றுதான் சொன்னார்கள். அது போல் நான் நடிக்கும் படங்கள் எல்லாம் கமல் படங்கள்தான். கமல் படத்தில் கமலின் ஆளுமை இருப்பதில் என்ன தப்பு?’’


என்று கமல் கேட்ட எதிர்கேள்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது சாதுர்யத்தை ரசிக்கவும்தான்.


அன்பேசிவம் படத்தைப் பார்த்த ரசிகன் இயக்குநரைப் பாராட்ட நினைக்கிறான். யாரைப் பாராட்டுவது? சுந்தர்.சியையா? கமலையா?’’


‘’ரெண்டு பேரையும் பாராட்ட வேண்டியதுதான்,’’ என்றார் கமல் பலத்த சிரிப்புடன்.


திரைப்படம் என்பது இயக்குநரின் மீடியா என்பதை மறந்து விட்டு பேசும் நீங்கள் உங்களது படங்களை நீங்களே இயக்கிவிட்டுப் போகலாமே? அதைச் செய்யாமல் வேறு ஒருவரை இயக்குநராகப் போட்டுவிட்டு அவரை நீங்கள் வழி நடத்துவதுகிற பெயரில் அந்த இயக்குநரின் தனித்தன்மையை காவு கொடுப்பது போல் இருக்கிறதே?’’


நான் இப்படிக் கேட்டதும் நேரடியாக பதில் சொல்லாமல்,‘இனி கமல் நடிக்கும் படங்கள் கமல் படங்களாக இருக்கும்’’என்றார் விடுகதையாக.


அதன் அர்த்தம் என்ன? இனி உங்களின் இயக்கத்தில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறீர்களா?’’

கேட்டதும் அர்த்தபூர்வமாக சிரித்தார்.


அன்பேசிவம் படத்தைப் பார்த்த போது புரிபட்ட விஷயம்.. அந்த படத்தின் கதை உருவான மையப்புள்ளி சில வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட வீதி நாடகக் கலைஞர் சப்தர்ஹஸ்மி.கரெக்ட் மிஸ்டர் கமல்?


‘ரொம்பச் சரி. சப்தர்ஹஸ்மி கொல்லப்பட்டப்ப நாங்கள் எல்லாம் டெல்லியில கண்டன ஊர்வலம் நடத்தினோம். அவரது மரணம் மறக்க முடியாத கொடூரம். அது மனசுக்குள்ள ஒரு முள்ளு மாதிரி குத்திக்கிட்டே இருந்த விஷயம். அதுதான் அன்பே சிவம் கதையா உருவாச்சு. படம் ரெடியானதும் பிரிண்ட்டை டெல்லிக்கு எடுத்துப் போய் சப்தர்ஹஸ்மியோட ஃபேமிலிக்குப் போட்டுக் காட்டினேன். நானூறு பேர் உட்கார்ந்து படம் பாக்குற தியேட்டர்ல அவரோட ஃபேமிலியை சேர்ந்த எழுபத்தைந்து பேர் மட்டும் அன்பேசிவம் படத்தைப் பாத்தாங்க. அவருக்கு செலுத்தின அஞ்சலின்னு கூட இதை சொல்லலாம்.’’


நெகிழ்ச்சி தெரிந்தது கமல் முகத்தில்.


கமல் நடிக்கும் படங்கள் நவீன தொழில்நுட்பத்தை முன்மொழிவதாக இருப்பது போற்றத்தக்க விஷயம். ஆனால் அவரது படங்களின் கதைகள் ஆங்கிலப்படங்களில் இருந்து சுட்டதாகவே இருக்கின்றன - பெரும்பாலும். நாயகன் - காட்ஃபாதர், அவ்வைசண்முகி - மிஸஸ் டவுட்ஃபயர், மகளிர் மட்டும் - நைன் டூ ஃபைவ், சதிலீலாவதி - ஷி டெவில் என்று இப்படி பெரிய பட்டியலேப் போடலாம். அனேகமாக தேவர்மகன்தான் ஒரிஜினல் சரக்கு? என்று நினைக்கிறேன்.


என்று நான் கேட்ட கேள்விக்குக் கொஞ்சமும் கோபப்படாத கமல் புதிய தகவல் ஒன்றையும் சொன்னார்.


‘அதுவும் ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து எடுத்ததுதான்.’’ என்று வெளிப்படையாக சொன்னதோடு, அந்த ஆங்கிலப் படத்தின் பெயரையும் சொன்னார் கமல்.


‘நல்ல விஷயங்களில் இன்ஸ்ஃபயர் ஆவதில் தப்பென்ன?’’ என்று தன் உல்ட்டாலக்கடியை ஒரே வரியில் நியாயப்படுத்தினார்.


திரையுலகில் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு நடிகராக கமல் என்ன வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?


‘நாயகன் வந்தப்ப யாரும் காட்ஃபாதரைப் பாத்திருக்க மாட்டாங்க. இப்ப அப்படியில்லை. நாயகனை இப்பப் பண்ணியிருந்தா காட்ஃபாதர்னு சொல்லிடுவாங்க. காரணம் டி.வி. சேனல்ல எல்லாப் படங்களையும் மக்கள் சுலபமாப் பாக்கிறாங்க. போதாக்குறைக்கு ஆங்கிலப்படங்கள் எல்லாம் டூரிங் கொட்டகையில தமிழ் பேசிக்கிட்டு இருக்கு. ஸோ நாங்க இன்னும் அட்வான்ஸா வொர்க் பண்ணணும். சுருக்கமாச் சொன்னா ஆங்கிலப் படங்கள் மாதிரி படம் பண்றதைவிட ஆங்கிலப் படங்களை மிஞ்சுற அளவுக்குப் பண்ணணும். அவற்றொடு நேரடியாய் போட்டிப் போடணும்’’


உண்மையில் கமல் மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசமானவர்தான். இதே கேள்வியை மற்ற ஹீரோக்களிடம் கேட்டிருந்தால் திருட்டு வி.சி.டி,தான் இப்போதைய சவால் என்று ஆரம்பித்து ஒரு பாட்டம் அழுதுத்தீர்த்திருப்பார்கள். கமலுக்கோ அது ஒரு பிரச்சனையாகவே இல்லை.


‘வி.சி.டியை ஒழிக்க முடியாது, ஒழிக்கக் கூடாது. அது விஞ்ஞான வளர்ச்சி. அதைத் தடுக்கவோ, தடை போடவோ முடியாதுங்கிறது யதார்த்தமான உண்மை. இதைப் புரிஞ்சுக்காமப் பேசிக்கிட்டிருப் பதில் பிரயோஜனமில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதை எப்படி நம்மளோட வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கணும்னுதான் நாம் பார்க்கணும். உதாரணமா ஆம்னி பஸ்களில் சர்வசாதாரணமா புதுப்பட வி.சி.டி.களைப் போடுறாங்க. இதை எப்படி தடுக்கிறது? யார் தடுக்கிறது? முடியாது, அப்ப இதை நாம பயன்படுத்திக் கிறதைப் பத்தி யோசிக்கணும். சில வருடங்களுக்கு முன்பு வி.ஹெச்.எஸ். வந்தப்பவும் இப்படித்தான் கூக்குரல் போட்டோம். கடைசியில என்னாச்சு?’’


வரட்டுக் கூச்சல்களுக்கு மத்தியில் கமல் யதார்த்தமாக சிந்திப்பவர். இந்த வி.சி,.டி. விஷயத்தில் முன்னுதாரணமாக கமல் ஏதேனும் செய்யலாம், இல்லையா?


‘எல்லாரும் கூடி செய்யிற வேலை இது. நான் மட்டும் எதையும் சாதிச்சிட முடியாது. நம் கருத்தை மற்றவர்களும் ஒப்புக் கொள்ளும் சூழ்நிலை வரும் வரை காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வெகுவிரைவிலேயே வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.’’

2 comments:

  1. //‘’ரெண்டு பேரையும் பாராட்ட வேண்டியதுதான்,’’ என்றார் கமல் பலத்த சிரிப்புடன்.// - என்னை பொருத்தவரை இது நியாயமான பதில். திறமை யாரிடம் இருக்கிறது - யாரை பாராட்டவேண்டும் என்பதை பலரும் அறிவார்கள்..!!

    ReplyDelete
  2. //‘நல்ல விஷயங்களில் இன்ஸ்ஃபயர் ஆவதில் தப்பென்ன?’’ என்று தன் உல்ட்டாலக்கடியை ஒரே வரியில் நியாயப்படுத்தினார்.// - என்னதான் உட்டாலக்கடியாக இருந்தாலும் தமிழில் வரும் முட்டாள்தனமான கதைகளுக்கு மத்தியில் இவை வரவேற்கதக்கவை..!!

    ReplyDelete