Sunday 12 July 2009

நாவை அடக்கு நன்றிகெட்ட சேரனே...

முன்குறிப்பு - சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்களை கெட்ட வார்த்தையால் சாடினார் சேரன். அதற்கு பதிலடியாக குங்குமம் இதழில் நான் எழுதிய கட்டுரையே இது.

படைப்பாளனை செழுமைப்படுத்துவது பாராட்டு அல்ல, விமர்சனம்! நிஜமான படைப்பாளி எவரைக் கேட்டாலும் இந்த கருத்தில் நிச்சயம் உடன் படுவார்கள். இதில் முரண்படுகிறவர் படைப்பாளியாய் இருக்க மாட்டார், படைப்பாளியாய் வேஷம் கட்டிக் கொண்ட, முகமூடி தரித்துக் கொண்ட, புகழ் போதைக்கு அடிமையானவராகவே இருப்பார். தமிழ்சினிமாவை புரட்டிப்போட புறப்பட்டு வந்த வராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் சேரன் இப்படியான ஒரு புகழ்போதை அடிமைதான் என்று சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.


சினிமா - சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில், குப்பைகளை எல்லாம் கோபுரத்தில் ஏற்றி வைத்து விடுகிறது. அப்படி கோபுரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட குப்பையாகவே நான் சேரனைப் பார்க்கிறேன். இந்த பாவத்தை செய்ததில் ஊடகங்களுக்கும், என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வெட்கத்தோடு ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். ஏனெனில், சேரனின் முதல் படம் பாரதிகண்ணம்மா தொடங்கி, தவமாய் தவமிருந்து வரை அவரது ஒவ்வொரு படத்தையும் சிலாகித்து, சிகரத்தில் ஏற்றி வைத்ததோடு, சேரனையும் சிம்மாசனத்தில் அமர்த்தியது ஊடகங்கள்தான்.


சேரன் இயக்கிய படங்களில் வெகு சில தவிர தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி போன்ற பல படங்கள் வர்த்த ரீதியில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய படங்கள். அந்தப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று படத்துறையிலேயே இல்லை. இருக்கும் வெகு சிலரும் சேரனை வைத்து படம் எடுத்த பாவத்துக்கு இன்னமும் கூட வட்டிக் கட்டிக் கொண்டு கடனாளியாய்..! ஆனாலும் சேரனுக்கு படத்துக்குப் படம் பேரும், புகழும் கூடிக் கொண்டே போனதற்கு ஊடகங்கள் அன்றி வேறு யார் காரணமாக இருக்க முடியும்?


தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் தனிக்குடித்தனம் நடத்துமளவுக்கு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கமும், அவரது ஆபாசமான, அருவறுப்பான முகமும் நாம் அறியாதது அல்ல. பட வாய்ப்புக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் பெண்களிடம் மட்டுமின்றி திருச்சியை சேர்ந்த ஒரு குடும்பப் பெண்ணிடமும் தன் பாலியல் வக்கிரத்தைக் காட்டி அசிங்கப்பட்டவர்தான் இந்த சேரன். அப்படிப்பட்ட சேரனின் தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து அவரது படைப்பை மட்டுமே பாராட்டி உச்சிமுகர்ந்ததன் விளைவே - இன்றைக்கு சேரனுக்குக் கிடைத்த இந்த பகட்டு வாழ்க்கை! போர்க்கொடி படக்கம்பெனியில் ஒரு அகதியைப் போல் ஒட்டிக்கொண்டு வறுமை வாழ்க்கை வாழ்ந்த சேரன், இன்று கோடிகளில் புரள்கிறார். சேரனின் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தன் உயர்வுக்குக் காரணமானவர்களை தினமும் நன்றியோடு நினைவுகூர்ந்திருப்பார்.


ஆனால் சேரன்? பொது நிகழ்ச்சியில் சபை நாகரிகம் மறந்து, தன்னிலை மறந்த ஒரு குடிகாரனைப்போல் சென்னையின் கெட்ட வார்த்தையால் பத்திரிகையாளர்களைத் திட்டித்தீர்த்திருக்கிறார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில், தன்னை வாழ வைப்பவர்களை எல்லாம் பிறகுவசைபாடுவதுதான் சேரனின் குணஇயல்பு. தன் நண்பனை எப்படியாவது இயக்குநராக்கியே தீர வேண்டும் என்று தன் சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு கோடம் பாக்கத்தை சுற்றி வந்த தேனப்பனையும், சேரனுக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஹென்றியையும், இதெல்லாம் ஒரு கதையா என்று அப்போதைய ஹீரோக்கள் நிராகரித்த பாரதிகண்ணம்மா கதையில் நம்பிக்கை வைத்து அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டன் மூலம் சேரனுக்கு இயக்குநர் அந்தஸ்தைக் கொடுத்த பார்த்திபனையும், இன்னும் அவரது வாழ்வின் உயர்வுக்காக தோள் கொடுத்த பலரையும் சேரனின் விஷநாக்கு எப்படி எல்லாம் பதம் பார்த்தது என்பதை நான் நிறையவே அறிவேன்.


சொல்லப்போனால் சேரன் என்கிற விஷப்பாம்பு என்னையும் கூட ஒரு நாள் தீண்டிப் பார்த்தது. பொற்காலம் படத்துக்குப் பிறகு பாரசீக ரோஜா என்ற பெயரில் ஒரு படத்தை அவர் இயக்குவதாக இருந்து, பிறகு அப்படம் கைவிடப்பட்டது. ஏன் என்ற காரணத்தை புலனாய்வு செய்து வண்ணத்திரை இதழில் எழுதினேன். இதுதான் நான் செய்த குற்றம். அதைக் கண்டு வெகுண்டெழுந்த சேரன், சில அடியாட்களுடன் வந்து அந்த பத்திரிகை அலுவலகத்தில் சண்டித்தனம் செய்தார். அப்படியும் அவரது ஆத்திரம் அடங்க வில்லை. நான் எழுதுகிற பத்திரிகைகளின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு என்னை பத்திரிகை உலகத்திலிருந்தே அப்புறப்படுத்தும் அரிய பணியையும் செய்து கடைசியில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தார்.திரையுலகம் எத்தனையோ ஜாம்பவான்களை சந்தித்திருக்கிறது. அவர்கள் பலருக்கு பல நேரங்களில் தென்றலாக இருந்த பத்திரிகைள் சில நேரங்களில் அனல் காற்றையும் வீசி இருக்கிறது. அதற்காக எம்.ஜி.ஆர். உட்பட எவருமே சம்மந்தப்பட்ட பத்திரிகையாளரின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்ததில்லை. அப்படியொரு கேவலமான செயலைச் செய்த ஒரே சினிமாக்காரர் சேரன்தான். (அதே சேரன் சில வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்பூமி பட விழாவில் தன் செயலுக்கு வருந்தி என்னிடம் நட்புப் பாராட்டத் தலைப்பட்டது தனிக்கதை!) சேரனின் குரூரபுத்திக்கு இப்படி எத்தனையோ உதாரணங்கள்தான்.!


ஒரு படைப்பாளனுக்கு தன் படைப்பின் மீது கர்வம் இருப்பதில் தவறில்லை. அது அளவுக்கு மீறி அவனது தலையைக் கனக்க வைத்துவிடக் கூடாது. சேரன் விஷயத்தில் அவரது கர்வம், தலைக்கனமாகி, அதையும் மீறி அவரை அகம்பாவம் கொண்டவராகவும் மாற்றிவிட்டிருக்கிறது என்பதே நான் அவரை கிரகித்து அறிந்த உண்மை. தன்னை மிகப்பெரிய கலைஞனாக எண்ணி சுயகற்பனையில் திளைக்கும் சேரனால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அது ஒரு மன வியாதியாகவே எனக்கு தோன்றுகிறது. (யாரேனும் நல்ல டாக்டரை சிபாரிசு செய்வீர்களாக!)


தவமாய் தவமிருந்து படம் வெளியான போது அந்தப்படத்தை பாராட்டாத பத்திரிகைகளில்லை. ஒரு இணையதளத்தில் மட்டும் அப்படம் கடுமையாக விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டிருந்தது. அந்த விமர்சனத்தை மறுபிரசுரம் செய்த பத்திரிகையை மிக கேவலமான வார்த்தைகளால் சாடினார் சேரன். உலகில் படைக்கப்படுகிற எல்லா படைப்புகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவைதான். திரைப் படங்களைப் பொருத்தவரை உலக அரங்கில் இன்று வரை இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி வருவது சத்யஜித்ரேதான். அவரது படைப்புகளை மிஞ்சிய படைப்புகள் இன்றுவரை எவராலும் படைக்கப்படவில்லை. அப்பேற்பட்ட சத்யஜித்ரே கூட, ‘இந்தியாவின் வறுமையை வெளிநாடுகளில் விற்கிறார்’ என்ற விமர்சனத்தை சந்தித்தார். சத்யஜித்ரேயை மிஞ்சியவரா இந்த சேரன்?


நேர்மையான எந்தவொரு படைப்பாளனும் தன் வாழ்க்கைக்கு முரணான படைப்பை படைக்கவே மாட்டான். அது போல், தன் படைப்புக்கு விரோதமான செயலை செய்யவும் மாட்டான். முற்போக்கு இயக்குநர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் செலுலாய்டு வியாபாரியான இந்த சேரனின் படைப்புகளுக்கும், செயலுக்கும்தான் எத்தனை முரண்பாடு?


மேடைகளிலும், பேட்டிகளிலும் தன்னை சமூக அக்கறை கொண்டவராகக் காட்டிக் கொள்ளும் சேரனின் உள்மனம் எத்தனை அழுக்கானது என்பதற்கு சாட்சி ‘மாயக்கண்ணாடி’ படம் ஒன்று போதும். மேலூரிலிருந்து புறப்பட்டு வந்ததை மறந்துவிட்டு மேல்தட்டு வாழ்க்கை வாழும் சேரன் அந்தப் படத்தில் சமூகத்துக்கு சொன்ன செய்தி என்ன? அப்பன் செய்யும் தொழிலையே புள்ளையும் செய்யணும் என்ற ராஜாஜியின் குலத்தொழில் கொள்கையைத் தானே? இப்படி சமூகத்து எதிரான கருத்தை சொல்லலாமா என்று கேட்டால் குய்யோமுறையோ என்று கூப்பாடு போட்டார். மாயக்கண்ணாடி படத்தை ரசிக்கும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு அறிவில்லை என்று அகம்பாவத்துடன் பேசினார் - அந்த தமிழ் மக்கள் கொடுத்த பணத்தில்தான் கொழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற குறைந்தபட்ச நன்றி கூட இல்லாமல்.


போலி புரட்சியாளர் சேரனின் பொய்த்தனத்துக்கு கடந்த காலத்திலும் சில உதாரணங்கள் இருக்கின்றன. தேசியகீதம் படம்தான் அது. ‘நூறு ரூவா சம்பாதிச்சா அதில் அரிசி விலை எவ்வளவு? சர்க்கரை எவ்வளவு? பருப்பு என்ன விலைன்னு தெரிஞ்சிருக்கிறவர்தான் முதல்வரா வரணும்.’ என்று வசனம் வைத்திருந்த சேரன், அப்படம் வெளியான சில நாட்களில் பிரபல பத்திரிகைக்கு (குமுதம்) பேட்டி கொடுத்தார். அதில் ஒரு கேள்வி..


‘’அரசியலை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறீர்கள். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?’’


சேரன்: கட்டாயம் வர வேண்டும். அவர் வந்தால் நன்றாக இருக்கும். வருவார். என் தேசிய கீதம் படத்தில கூட பாட்டுல ஒரு வரி வரும்..மக்கள் நம் மக்கள் என் உணர்வுள்ள தலைவன் வேண்டும்’ என்று. அதில் காந்தி, நேரு, காமராஜ் மூணு பேரையும் மார்ஃபிங்ல காமிச்சிருக்கேன். அப்ப நான் நினைச்சேன். காமராஜருக்கு அப்புறம் ரஜினிகாந்தை காமிச்சா என்னன்னு. ஏன்னா மக்கள் நம் மக்கள்ங்கிற உணர்வு ரஜினிகிட்டத்தான் இருக்கு. அந்த மாதிரி ஒரு தலைவன் நமக்கு வேண்டும். அவர் வந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.’ என்று பதில் சொன்ன சேரன், வசூலில் தேசியகீதம் படம் நொண்டியடிக்க ஆரம்பித்ததும் ரஜினியை படம் பார்க்க வைத்து அவரிடம் ஒரு பாராட்டுக் கடிதம் வாங்கினார். ‘நான் சிந்தித்ததை சேரனும் சிந்தித்திருக்கிறார். என் படமாக நினைத்து அவர் படத்தைப் பாருங்கள்’ என்ற ரீதியில் ரஜினி ஒரு கடிதம் கொடுக்க, அது தேசியகீதம் படத்தின் விளம்பரங்களில் இடம்பெற்றது.


அந்த விசுவாச மேலீட்டில், ‘’ரஜினியோட கடிதத்தால் படத்துக்கு இன்னும் ப்ளஸ்பாயிண்ட். பத்து பர்ஸென்ட் வெற்றிக்கு ரஜினிதான் காரணம்னு சொன்னால் கூட எனக்கு சந்தோஷம்தான். ரஜினி ஸாரிடம் தொடர்ந்து பாராட்டு பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.’’ என்றும் புளகாங்கிதப்பட் டிருந்தார். புரிகிறதா சேரனின் உண்மை முகம்? நிஜ வாழ்க்கையில் தன்னை மட்டுமல்ல தமிழகத்தையும் அரிசி விலை தெரியாத ரஜினியிடம் அடகு வைக்க ஆசைப்பட்டவர்தான் இந்த சேரன்.


‘’காமராஜர் போன்ற முதல்வர் நேர்மையான அரசியல்வாதி இன்றைக்கு யாருமே இல்லை. இன்றை அரசியல் வாதிகள் ஏழைகளை ஏமாற்றுகிறார்கள். சுயநலவாதிகள்தான் இப்போது அரசியலில் இருக்கிறார்கள்’’- இதுவும் ஒரு பத்திரிகை பேட்டியில் சேரன் வடித்த நீலக்கண்ணீர்தான். இப்படி நாட்டுக்காக கவலைப்பட்ட சேரன், சில நாட்களிலேயே அப்போது உயிரோடிருந்த மூப்பனாரை அழைத்து தன் தேசியகீதம் படத்தை பார்க்க வைத்தார். சம்பிரதாயமாக அவர் சொன்ன பாராட்டு வார்த்தைகளை பத்திரிகை செய்தியாக்கி தனக்குத்தானே பரிவட்டம் கட்டிக் கொண்டார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் வைகோ கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு அவரை பாராட்டித்தள்ளினார்.


எல்லாவற்றையும் விட, தேசியகீதம் படத்தின் இறுதிக்காட்சியில் இட ஒதுக்கீடு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்தான் இந்த சேரன்.


இப்படியாக தன் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் விசுவாச மில்லாமல் போலித்தனமாகப் பேசிக் கொண்டு திரியும் சேரனுக்கு பத்திரிகையாளர்களைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?


சேரனுக்கு கடைசியாய் ஒரு வார்த்தை...
நாவை அடக்கு!

No comments:

Post a Comment