Tuesday 30 June 2009

தாமதம் ஏன்? தரமா...தயக்கமா...

படத்துறையைப்பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால்..அது ஒரு பரமபதம்! இங்கே ஏணியில் ஏறி உச்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையைவிட, பாம்பின் வாய்க்குள் அகப்பட்டு பாதாளத்துக்கு செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். குறுகிய காலத்திலேயே கோடிகளில் புரளலாம் என்பது மட்டுமல்ல, புகழ் வெளிச்சத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதே பலரும் படத்துறையை நோக்கி படையெடுக்க முதன்மையான காரணமாக இருக்கிறது. புகழோடு பணம் என்கிற நோக்கத்தோடு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைப்பவர்களில் வெகு சிலருக்கே வெற்றி வசப்படுகிறது. பலருக்கும் வெற்றி கடைசிவரை கனவாகவே ஆகிவிடுகிறது.


வெற்றி பெற்றவர்கள் அடுத்தடுத்த படிகளில் ஏறி உச்சியை அடைவதும், தோற்றவர்கள் துவண்டுபோய், ஒரு கட்டத்தில் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், தன் லட்சியத்தைவிட்டே வெகுதொலைவு விலகிப் போய்விடுவதும் வியப்பான விஷயமில்லை.
வெற்றி பெற்றவர்களே காணாமல் போகிறார்கள் என்றால்? அதுவும் பணம் கொட்டும் படத்துறையில்? இப்படி ஒரு அதிசயத்தை அண்மை வருடங்களாக படத்துறையில் காணமுடிவதுதான் ஆச்சர்யத்தையும், கூடவே கேள்விகளையும் எழுப்புகிறது. தனக்குக் கிடைத்த வெற்றியை சற்றும் தாமதிக்காமல், உடனடியாய் பணமாக்குவது திரைப்படத் துறையினருக்கே உரித்தான பொதுவான குணாம்சம். அதாவது காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது! கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், திரைத்துறையில் காலா காலத்துக்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதைவிட, அதை எப்படி பணமாக்குவது என்பதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். இதில் நட்சத்திரங்கள் என்றில்லை, இயக்குநர்களும் அடக்கம்தான்.

ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்துவிட்டால் போதும், அடுத்த சில நாட்களிலேயே அந்த இயக்குநர் அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகிவிடுவதும், கதை இன்ன பிற விஷயங்கள் முடிவா காமலே படபூஜைகள் விமரிசையாக நடப்பதும் திரைப்படத் துறையில் சர்வசாதாரணம்.

அந்த இயக்குநரிடம் அடுத்தப்படத்துக்கு கதை தயாராக இருக்கிறதா என்று அவரை வைத்து படம் எடுக்க முன்வருபவர் களும் கவலைப்பட்டதில்லை. கதை என்னவென்று முடிவு செய்யாமலே கைநீட்டி அட்வான்ஸை வாங்குகிறோமே என்று இயக்குநர்களும் கவலைப்பட்டதில்லை. இப்படியான சூழல் தமிழ்த்திரையுலகில் நிலவியதால்தான் சில இயக்குநர்களால் வருஷத்துக்கு நான்கைந்து படங்களைக்கூட இயக்க முடிந்தது. ஒரு காலத்தில் ராமநாராயணன் மாதத்துக்கு ஒரு படம் இயக்கியதாகக் கூட செய்தி உண்டு.

இதற்கு நேர்மாறாக இருக்கிறது திரையுலகில் தென்படும் இன்றைய சூழல். மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர்களில் பலர் அடுத்தப்படத்தைப் பற்றி அறிவிக்காமலே வருடக்கணக்கில் அமைதிகாத்தனர்.

‘பிதாமகன்’ படத்தை இயக்கிய பிறகு ‘நான் கடவுள்’ படத்தைத் தொடங்க இயக்குநர் பாலாவுக்கு மூன்றாண்டுகளுக்கு மேலானது. வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த ‘திருடா திருடி’ என்ற படத்தை இயக்கிய சுப்பிரமணியம்சிவா, ‘பொறி’ என்ற தன் அடுத்தப்படத்தை ஆரம்பிக்க எடுத்து கொண்ட காலமும் மூன்றாண்டுகளுக்குமேல்தான். வணிக மதிப்பில்லாத நட்சத் திரங்களை வைத்து ‘ராம்’ என்ற படத்தை இயக்கி வெற்றியடைந்த தோடு, வித்தியாசமான இயக்குநர் என்ற விலாஸத்தையும் பெற்ற அமீருக்கு, அடுத்தப்படம் - ‘பருத்திவீரன்’ - தொடங்க, ஒன்றரை ஆண்டுகள் பிடித்தது. ‘காதல்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்ததன் மூலம் திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த, இயக்குநர் பாலாஜிசக்திவேல், ‘காதல்’ படம் வெளியாகி ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கடந்த பிறகே Ôகல்லூரி’ படத்தை ஆரம்பித்தார். ‘இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி’ என்ற சரித்திர நகைச்சுவைப்படத்தைக் கொடுத்த சிம்புதேவன், மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் கனத்த மௌனத்துக்குப்பிறகே Ôஅறை எண் 301ல் கடவுள்’ படத்தின் அறிவிப்பையே வெளியிட்டார். ‘சித்திரம் பேசுதடி’ இயக்குநர் மிஷ்கினும் கூட இந்தப் பட்டியலில் உண்டு!

இவர்கள் எல்லாம் சட்டென நினைவுக்கு வந்த உதாரணங்கள்தான்! வெற்றி பெற்ற வேறு சில இயக்குநர்களும் கூட அடுத்த அடியை எடுத்த வைக்காமலே இருந்தார்கள்.

இந்த தாமதத்துக்கு அல்லது தயக்கத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும்? நட்சத்திர நடிகர்களை நம்பி இருக்கும் திரையுலகில் அவர்களின் கால்ஷீட்டை பொறுத்தே இயக்குநர்களின் தலைஎழுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் மறுப்பதற் கில்லை. ஆனால் வெற்றியடைந்த இயக்குநர்களுக்கு நட்சத் திரங்களின் கால்ஷீட் ஒரு பிரச்சனையே இல்லை. ஏனெனில், முன்னணி நட்சத்திரங்கள் காத்திருப்பதும், விரும்புவதும் வெற்றி பெற்ற இயக்குநர்களின் கூட்டணியைத்தான்.

அதுபோல் இவர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும் தயாராகவே இருப்பார்கள் என்பதை தனியாக சொல்லத்தேவை யில்லை. ஆக இவர்களுக்கு நட்சத்திர நடிகர்களின் கால்ஷீட்டும், தயாரிப்பாளர்களும் பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறபோது வேறென்ன காரணங்கள் இருக்க முடியும் என்ற கேள்வியின் தொடர்ச்சியாக, வேறுசில உப கேள்விகளும் எழுகின்றன.

முந்தைய படத்தில் கிடைத்த வெற்றி ஏற்படுத்திய பயமா? அல்லது, அந்த வெற்றியால் ரசிகத்தரப்பில் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப்போகிறோம் என்ற கவலையா? அடுத்து என்ன கதையை படமாக்கலாம் என்ற குழப்பமா? ஒருவேளை, கதைப்பஞ்சமா? அல்லது அவர்களின் சரக்கே அவ்வளவுதானா? பட எண்ணிக்கையைவிட தரமான படைப்பைத் தரவேண்டும் என்ற வேட்கையா? தெரியவில்லை!

ஒன்று மட்டும் நிச்சயம். இவை எல்லாமே அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றே காரணமாக இருக்க முடியும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. அதே நேரம், கைக்கெட்டும் தூரத்தில் பணப்பெட்டியோடு தயாரிப்பாளர்கள் காத்திருப்பது தெரிந்தும், அவர்களின் அவசரத்துக்கு ஆட்படாமல் தன் படைப்பின் பொருட்டு காலத்தை செலவிட்டுக் கொண்டிருப்பதும் இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களிடம் காணப்படும் நல்ல அம்சம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உலக அளவில் காலங்கள் பல கடந்தும் இன்றளவும் பேசப்படும் புகழ்பெற்ற பல படைப்பாளிகள் திரைப்பட ரசிக மனங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் அவர்களின் பட எண்ணிக்கை அல்ல, அவர்களின் படைப்பின் தரமே!

நம் இயக்குநர்களின் தாமதமும் இப்படியான படைப்புகளைத் தருவதற்கான காலஅவகாசமாக இருக்கும்பட்சம், அவர்களின் தாமதத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில், இவர்களின் தாமதத்துக்குப் பின்னால் தரமான படைப்பு வெளிப்பட்டால் மகிழ்ச்சி. அப்போதுதான் இந்த தாமதத்துக்கும் அர்த்தம் இருக்கும்.

No comments:

Post a Comment