Tuesday 30 June 2009

தறிகெட்ட தயாரிப்புச் செலவு

திரையுலகில் கோரிக்கைகளும், கூக்குரல்களும் எப்போதுமே ஓய்வதில்லை. ஏதாவது ஒரு அமைப்பிடமிருந்து, ஏதேனும் கோரிக்கைகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவை பல நேரங்களில் அபத்தமாகவும், அபூர்வமாக சில சமயங்களில் ஆக்கபூர்வமானதாகவும் இருப்பதுண்டு. அப்படி திரையுலகில் சமீப காலத்தில் ஒலித்த கோரிக்கை..’தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவை கட்டுப்படுத்த வேண்டும்’ என்பது! அதன் பின்னணிக் காரணத்துக்குள் போவதற்கு முன், தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.


தொண்ணூறுகளின் துவக்கம் வரை தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவு என்பது லட்சங்களிலேயே இருந்தது. லோ பட்ஜெட் என்கிற சிறு முதலீட்டுப்படங்கள் அதிகபட்சம் இருபத்தைந்து லட்சங்களிலும், மீடியம் பட்ஜெட் படங்கள் ஐம்பது லட்சங்களுக்கு மிகாமலும், பெரிய பட்ஜெட் படங்கள் எழுபது முதல் தொண்ணூறு லட்சங்களிலும் தயாராகின.


இன்றைக்கு லோ பட்ஜெட் படங்களின் பட்ஜெட்டே ஒரு கோடி! மீடியம் பட்ஜெட் படங்களுக்கு இரண்டு முதல் மூன்று கோடிகள் வரையிலும் செலவிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு உச்சவரம்பு இல்லை. ஷங்கரின் சிவாஜி படத்தின் பட்ஜெட் ஐம்பது கோடி என்றும், கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் நாற்பது கோடி என்றும் சொல்லப்பட்டன. இவற்றை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்தின் பட்ஜெட் நூற்றி ஐம்பது கோடி!


தமிழ்ப்படங்களின் பட்ஜெட் இந்தளவுக்கு எகிறியதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே சொல்வது... நட்சத்திரங்களின் சம்பளத்தைத்தான்! இதை அலட்சியப்படுத்த முடியாது. படத்தின் தயாரிப்புச் செலவில் சுமார் நாற்பது சதவிகிதம் நட்சத்திரங்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி? படங்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வணிக மதிப்புள்ள பட நாயகர்களின் எண்ணிக்கைக் குறைவாகவும் இருப்பதுதான் அடிப்படையான காரணம்.


ஒரு வெற்றிப்படத்தில் நடித்தால் போதும், அந்தக் கதாநாயக நடிகரை தயாரிப்பாளர்கள் மொய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தனக்கு இத்தனை வரவேற்பு இருப்பது தெரிந்ததும் அவர் ஒரு கோடி சம்பளம் கேட்கிறார். கொடுக்கத்தயாராகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஒரு படத்தில் நடித்தவருக்கே இப்படி என்றால் முன்னணி கதாநாயகர்களுக்கு எத்தனை கிராக்கி இருக்கும்?
கதாநாயக நடிகர்களின் சம்பளம் இந்தளவுக்கு உச்சத்தைத் தொட காரணம் என்ன? வெயிலில் காய்ந்து, வியர்வையில் குளித்து, வயலில் ஏர் உழுகிற ஏழை விவசாயத் தொழிலாளியைவிட இவர்கள் அதிகம் உழைத்துவிடவில்லை. அவன் நியாயமான சம்பளத்துக்கே போராட வேண்டியிருக்கிறது. இவர்களுக்கோ கரன்ஸிக் கட்டுகளை காலடியில் கொட்டுகிறார்கள். நட்சத்திரங்களின் சம்பளம் என்பது அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமாக இல்லாமல் வியாபாரத்துக்கான ஊதியமாக நியாயப்படுத்தப்படுவதுதான் காரணம்!


வியாபாரத்துக்கான ஊதியம் என்றால்?

இது பற்றி சற்று விளக்கமாகப் பேச வேண்டும்!


ஒரு கதாநாயக நடிகருக்கு ஒரு கோடி கொடுத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர், மேலும் இரண்டு கோடிகள் செலவு செய்து மூன்று கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கிறார். அவர் முதலீடு செய்த மூன்று கோடிக்கு வட்டியையும், லாபத்தையும் கணக்குப் போட்டு அந்தப் படத்தை நான்கு கோடிக்கு விற்கிறார். நான்கு கோடிக்கு படத்தை வாங்கியவர்கள், தங்களின் லாபத்தைக் கணக்கிட்டு, திரையரங்கினரிடமிருந்து ஐந்து கோடி பெறுகிறார்கள். ஐந்து கோடிக்கு படத்தை வாங்கிய திரையரங்கினர், ஒருவேளை படம் சரியில்லை என்றால் என்ன செய்வது என்ற பயத்திலும், தன் முதலீட்டையும், லாபத்தையும் சீக்கிரமே எடுத்துவிட வேண்டும் என்பதற்காவும் அதிகக் கட்டணத்தை வசூல் செய்தும், நிர்ண யிக்கப்பட்ட அளவுக்கு மேல் மக்களை அனுமதித்தும் பணத்தை அள்ளுகிறார்கள்.


இப்படியாக - அந்தப்படம் ஏழு கோடி வசூல் செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த செய்தி அந்தப்படத்தில் நடித்த கதாநாயக நடிகரின் காதுக்குப் போகும் போது, ‘Ôஎன்னை வைத்துப்படம் எடுத்தால் ஏழு கோடி வசூலாகும். அதனால் எனக்கு இரண்டு கோடி சம்பளம் வேணும்’’ என்று தன்னை ஏலம் போடுகிறார். அதோடு, ‘Ôஐந்து கோடி பட்ஜெட்டில் படத்தை எடுக்க வேண்டும்’’ என்று அன்புக் கட்டளையும் (அதிகாரக் கட்டளை?) போடுகிறார். அதற்கு உடன்பட்டு வேறொருவர், ஐந்து கோடியில் படம் எடுக்கும்போது, விநியோகஸ்தர், திரையரங்கினர் என்று கைமாறி, கடைசியில் அதன் வியாபாரம் பத்துகோடி என்றாகிவிடுகிறது. பத்து கோடிக்கு விற்கப்பட்ட படம் பதினைந்து கோடி வசூல் செய்யும் போது...மீண்டும் உயர்கின்றன நட்சத்திர சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும்! லட்சங்களில் இருந்த தமிழ்த்திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு கோடிகளான கதை இப்படித்தான்.


சரி.. தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விஷயத்துக்கு வருவோம். சாத்தியம்தானா இது? திரைத்துறையில் பிற பிரிவினரிடம் இதற்கு ஆதரவு இருந்தாலும், கதாநாயக நடிகர்கள் மத்தியில் மட்டும் கடும் எதிர்ப்பு. எனவே, அவர்களுக்கு பாதகமான இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதும் கடினமே! ஏனெனில் இன்றைய திரைப்படத்துறை நடிகர்களை நம்பியே இருக்கிறது.


தயாரிப்பாளரின் பணம், இயக்குநரின் எண்ணம், பிற தொழில் நுட்பக்கலைஞர்களின் உழைப்பு ஒன்றிணையும்போதுதான் திரைப்படம் சாத்தியமாகிறது. என்றாலும் திரைப்படங்களின் வியாபார பேரத்தின்போது, இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கதாநாயக நடிகர்களின் மார்க்கெட் வேல்யூ என்கிற வணிக மதிப்பு மட்டுமே திரைப்படங்களின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது. அதனால் அத்திரைப்படம் வெற்றியடைகிறபோது அதன் பலனை அறுவடை செய்கிறவர்களாகவும் கதாநாயக நடிகர்களே இருக்கிறார்கள். (பலன் என்பது பெரும்பாலும் அவர்களின் சம்பள உயர்வு)


ஆக - பணத்தை முதலீடு செய்வது தயாரிப்பாளர்களாக இருந்தாலும், திரைப்பட வணிகத்தில் கதாநாயக நடிகர்களே முன்னிலைப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பாதகம் தரக்கூடிய இந்த விஷயத்துக்கு உடன்பட மாட்டார்கள் என்பது உறுதியான விஷயம். அதற்காக இந்த கோரிக்கையை கைவிடுவதும் நியாய மில்லை என்றே தோன்றுகிறது. பட்ஜெட்டிலும், வியாபாரத்திலும் தமிழ்த்திரைப்படங்கள் விண்ணைத் தொட்டாலும், கதை அம்சத்தில் இன்னமும் குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.


குடும்பத்தை கொன்ற வில்லனை பழிவாங்குகிறவனும், சாலையில் சந்தித்த பெண்ணை அடைவதற்காக அவள் பின்னால் லோ லோ என்று அலைகிறவனும்தான் இன்னமும் தமிழ்ப் படங்களின் கதைக்குத் தலைமை தாங்குகிறார்கள். அதாவது கதாநாயகன்! விதிவிலக்காய் சில வித்தியாசமான படங்கள் வந்தாலும், தொண்ணூறு சதவிகிதப்படங்களில் இப்படிப்பட்ட புளித்துப்போன கதைகள்தான். இதைப் படமாக எடுக்க எதற்கு பதினைந்து கோடியும், இருபது கோடியும்?


திரைப்படங்களுக்கு எத்தனை கோடி செலவு செய்தாலும் அதை திரையரங்குகளில்தான் திரும்ப எடுத்தாக வேண்டும். அங்கே பணம் கொடுத்து படம் பார்ப்பவர்கள் பாமர மக்கள்தான். தமிழ்ப்படங்களின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதன் மூலம் மக்களே மேலும் மேலும் மொட்டையடிக்கப்படுகிறார்கள். திரைப்படத் துறைக்கு வரும் ஆபத்திலிருந்து அதை காப்பாற்றுவதற்காக இல்லாவிட்டாலும், மக்கள் நலனை மனதில் கொண்டாவது தமிழ்ப்படங்களின் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தியே தீர வேண்டும்.


திரைப்படங்களையும், திரைப்படத்துறையையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மீது சினிமாக்காரர்களுக்கு உண்மை யிலேயே அக்கறை இருந்தால் இதை உடனே அவர்கள் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment